Pages

திங்கள், ஜனவரி 16, 2012


விஞ்ஞானம் (தந்தை மகனுக்கு...)

ஆ.திருநாவுக்கரசன்
விஞ்ஞானம் -
அகல விரிந்த வீடு தடுத்து
அடுக்ககமாய் அதனை உயர்த்தி
நூற்றுக்கும் மேற்பட்ட கோடிக்கு
சோற்றுக்கு வழி செய்ய
விளை நிலம் காத்தது
விஞ்ஞானம்!
வியத்தகு விசயமெல்லாம் - நம்
விரல் நுனிக்கே
கொணர்ந்து சேர்த்தது
தொலைக்காட்சியில்
விஞ்ஞானம்!
நாம்
மூச்சு விட்ட எண்ணிக்கையினும்
"ரிமோட்டை"
முடுக்கிவிட்ட எண்ணிக்கை அதிகம்.
என் தந்தை
எனக்குச் சொன்ன கதையில்
ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
ஏதோ ஓர் கிளியில்
இளவரசி உயிர் இருக்கும்
புராணம் புனைந்த கதையில்
அன்று!
சிசாவில் உயிர் அடைத்து
ஊசி மூலம் உடலில் ஏற்றியது
மருத்துவ விஞ்ஞானம் - இன்று!
சில உறுப்புகள்
சேதம் அடைந்தாலும்
சில்லரையாய் உற்பத்தி
செய்து தரும் விஞ்ஞானம்!
வந்து போக வசதியாய்
உந்து வாகனங்கள்
மின்சாரம், தொலைபேசி
மேனி எழில் சாதனங்கள்
மருத்துவம், பொறியியல் என்று
மனித மேம்பாட்டில்
மாபெரும் பங்காற்றி
பொற்காலம் படைத்து வந்த
விஞ்ஞானத்தை
போர்க்களம் படைக்க வைத்த
கயமையே அரசியல்.
விஞ்ஞானம் தின்று செரித்து
அணுகுண்டாய் எச்சமிட்டது - அரசியல்
எச்சத்தை அடை காப்போர்
அரசியல்வாதிகளும்
ஆதிக்க வெறியர்களுமே!
அவர்களுக்குச் சொல்,
நுரையீரல் முழுதும்
நல்ல காற்றை நிரைக்கவும்;
மனது முழுதும்
நல்ல கூற்றை நிறைக்கவும்;
இரண்டுமே வாழ்வை
இனிதாக்கும்.
தானியக் கிடங்குகள்
யுரேனியக் கிடங்காய்
உருமாறிப் போனது
பரிணாமம் அல்லடா
பரிதாபம்.
இந்த நிலை மாற்றுவாயா?
நொந்த மனம் தேற்றுவாயா?
இரத்தக் கறையோடுதான் பிறந்தோம்
இரத்தக் கறையோடுதான்
இறக்க வேண்டுமா?

0 கருத்துகள்:

 

Blogger news

Blogroll

About